புதன், 26 மே, 2010

த.பா.ச - தகப்பனால் பாதிக்கப்பட்டோர் சங்கம்

பதின்ம வயதின் தனித்த அடையாளங்களில் ஒன்று, தகப்பன்களிடன் அடிக்கடி ஆப்பு வாங்கிக்கொள்வது. தீராத சண்டை தினமும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு நிகழ்ந்துகொண்டே இருக்கும். அனைத்து வீட்டிலும் இது நீக்கமற நிறைந்திருந்ததால், 11,12 வகுப்பு படிக்கையில், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து த.ப.ச ஆரம்பித்தோம்.

அன்றாட பாதிப்புகள் மற்றும் அடிதடிகளுக்கு ஏற்ப, தகப்பன்களுக்கு அர்ச்சனை நடக்கும் மாலை நேரத்து சங்க கூட்டங்களில்., ஒருமையில் கடுப்படிப்பது முதல், கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்வது முதல் தங்கள் கோவத்தை பதிவு செய்து மற்ற உறுப்பினர்களின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெறுவார்கள் நண்பர்கள்.

அடிதடியில் முகம் வீங்கி, சைக்கிள் வசதி பிடுங்கப்பட்டு, அல்லது சாப்பாடு போடாமல் வீட்டை விட்டு துரத்தப்பட்டு, பாக்கெட்டில் கைவைத்து அடிவாங்கி, தம்மடிக்கையில் பிடிபட்டு என பாதிப்பு பல வடிவங்களில் இருக்கும். நித்தியும், பிரகாசும் ஒரே துண்டுபீடியில் ஒட்டுமொத்த கவலையையும் ஊதித்தள்ளிவிட்டு, அடுத்த பீடியை தேற்றுவதற்கான முயற்சியில் இறங்கிவிடுவார்கள்.

எல்லோர் வீட்டிலும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. பிள்ளைகளின் தவறா அல்லது பெற்றோரின் தவறா என்ற மனோதத்துவ ஆராய்ச்சிக்கெல்லாம் இறங்காமல், அனுதின சண்டைக்கு மாலை நேரத்து அர்ச்சனைகளின் மூலம் அமைதிகண்டு, பொழப்பை ஓட்டிக்கொண்டிருந்தார்கள் அனைவரும். என்பங்குக்கும் ஏகப்பட்ட சண்டைகள் போட்டதுண்டு. வண்டி துடைப்பதில் ஏற்பட்ட தன்மானப் பிரச்சனையில் கடைசிவரை என் தந்தையின் வண்டியை பயன்படுத்தாமல் நடந்தே சென்று நடந்ததே வந்ததுண்டு. நானாக வண்டி வாங்கும்வரை அவரின் வண்டியை தொட்டதில்லை நான்.

அந்த வயதில் ஏற்படும் காயங்களும் மிக ஆழமாக மனதில் பதிந்துவிடுவதால், கடைசிவரை அந்த கசப்பு குறைவதே இல்லை. பெரும்பாலான ஆண்கள், தந்தையாக இருப்பதறகான அடிப்படை தகுதிகள் அற்றவர்கள் என்பதே கண்கூடு. இனிவரும் காலங்களில் அந்த சமன்பாடு மாறலாம். கல்வி அறிவு மட்டுமே அந்த தகுதியை தந்துவிடாது என்பதே என்கருத்து. அடிப்படை மனித அன்பு, பொறுப்புணர்ச்சி, ஈகோ இதெல்லாம் உறவுகளை நிறுவும் காரணிகள் என்பதால், ஆண்கள் அந்த ரோலில் பெரும்பாலும் டக் அவுட் ஆகிவிடுகின்றனர்.

சிலநேரங்களில் தகப்பன்களின் தொல்லை ஒரு மோட்டிவேட்டராக செயல்பட்டு பிள்ளைகளை பொறுப்புடன் இருக்க தூண்டும், ஆனால் இது மிகவும் அரிதே. பிள்ளைகள் மிகவும் பலவீனர்களாக இருக்கும் பட்சத்தில் போதை, பொறுப்பின்மை என வாழ்க்கையை தொலைத்துவிடுவதுண்டு. நாம் எல்லோரும் ஏதோ ஒரு கட்டத்தில் பெற்றவர்களை பார்த்து கேட்கும் கேள்வி: என்ன எதுக்கு பெத்த? நான் உன்ன பெத்துக்க சொன்னேனா? என்பது தான். அதை நம் பிள்ளைகளும் நம்மை பார்த்து கேட்காம இருக்குமளவுக்கு நடந்துக்கவாவது முயற்சிப்பது நமதுஅடிப்படை கடமை என்றே நினைக்கிறேன்.

என்னோட பாஸ் அடிக்கடி சொல்லுவார், எந்த குழந்தையும் என்ன பெத்துக்கோ பெத்துக்கோ என நம்மள கெஞ்சுறதுல்ல, நாமளா பெத்துக்கறப்ப அந்த குழந்தைய கவனமா வளர்ப்பது தான் நம்ம் கடமை’ன்னு. அன்னை வளர்ப்பில் அனைத்து குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான்.. ஆனால் அது தந்தைகள் தலையிட்டபின்பு கனவுகளை சிதைத்து, தலைமுறைகளையே அழித்துவிடுகிறது என்பது கவனிக்கப்படாத உண்மை. இப்படிக்கு தகப்பனால் பாதிக்கப்பட்டோர் சங்க நிறுவனர். :(

வெள்ளி, 7 மே, 2010

இதுவுமது

இன்றுதான் தலையுயர்த்தி பார்த்தேன்
நின்று சிறிது பேசவும் செய்தேன்
தீண்டியபடி சிறிதூரம் நடக்கையில்
மென்மையின் குறுகுறுப்பு
ஒவ்வொரு தீண்டலும்
வேறாகவும் ஒன்றாகவும்
பதில்கள் அற்ற அமைதியில்
வேர்விடும் சுயத்தில்
உயிர்ப்பின் வாசம்

எலியைத் தடவும்
எழவெடுத்த வாழ்க்கையில்
நேரம்கிடைக்கையிலே
கேட்டுவைக்கலாம்
இவ்வளவு நெருக்கமாக
வளரும் வாழ்வில்
என்றேனும் அடித்துக்கொண்டதுண்டா
தோட்டத்து புற்கள்?