வியாழன், 30 ஜூலை, 2009

கங்கை கொண்ட சோழபுரத்தில் நாயக்கர் சிலை

கங்கைகொண்ட சோழபுரம் - தமிழகத்தின் நிகரில் சோழவேந்தனான ராசேந்திர சோழனின் கையெழுத்துப் படைப்பு - (Signature Masterpiece). ராசேந்திரரும் தஞ்சையிலே ஆட்சியை தொடர்ந்திருந்தால் நமக்கு கங்கை கொண்ட சோழபுரம் என்ற கலைக்களஞ்சியம் கிடைக்காமலே போயிருக்கும். எதையும் துணிவுடன், தனித்து செய்யும் ராசேந்திரரின் கலைப்பார்வையின் அழகுயல் வெளிப்பாடே. தஞ்சையும் - ககொசோழபுரமும் பலவகையில் ஒருங்கமைவு கொண்டவை. அதில் மிக இன்றீயமையாதது - கடவுளர் சிலைகள் தவிர மற்ற சிலைகளை கருவறையிலோ அல்லது அதன் பிரகார சுவற்றிலோ காணமுடியாது.

கடவுளர்-சிவகணங்கள்-நாயன்மார் அல்லது புராண மாந்தர்கள். ராசராசரோ - ராசேந்திரரோ அல்லது எந்த சோழமன்னர்களோ கோவில் பிரகாரங்களில் செதுக்கப்படவில்லை. அத்துணை விதமான சிவனை ரசிக்கலாம் தஞ்சையில். அழகியலும் கம்பீரமும் ததும்பும் அச்சிலைகள் நம் முன்னோர்களின் நிகரில் திறன். நிகரில் சோழமண்டலம் என்பது காரணப்பெயர் தான் போலும். ககொசோழபுரத்தில் சில சிற்பங்கள் உயிர்பெற்று நம்முன் நிற்பது போலவே தோன்றும். சந்திரசூடேச்வரர்-சிவன் பார்வதி சிலைபோன்ற அழகிய வடிவை நான் வேறெங்கும் கண்டதில்லை.
கல்லென்றால் கல் - கடவுள் என்றால் கடவுள் என குழப்பிய கண்ணதாசன் - கலை என்றால் கலை, நிலை (நிலையானது) என சொல்லிச் செல்லாமல் விட்டார். கடவுள் கால் கிலோ என கேட்கும் நமக்கே அந்த சிலைகளின் மீது காதல் வருமளவிற்கு தன் தறனை அந்தச் சிலையில் விட்டுசென்றிருக்கும் அந்த சிற்பியின் பாதங்கள் என் தலை மேல்!

நிற்க: ககொசோழபுரத்து அழகை மற்றொரு பதிவில் பார்க்கலாம். தலைப்பிற்கு வருவோம்.

கோவிலின் வலதுபக்க பிரகாரச்சுவற்றில், கருவறைக்கு செல்வதற்கு முன்பான மண்டபச்சுவற்றில், முதல் சிலையாக நிற்கும் ஒரு சிலை என்கவனத்தை ஈர்த்தது. அது ஒரு நாயக்கர் கால சிற்பம். எந்த நாயக்க மன்னன் எனத்தெரியவில்லை - புக்கராயன் அல்லது அவனுக்கு பிறகு வந்த எவராவது இருக்கலாம். கிருஷ்ணதேவராயராக இருக்கவே வாய்புகள் அதிகம் - அவரே சராசரி உயமுள்ள அரசர் என போர்த்துசுக்கீய குறிப்புகள் சொல்கின்றன. இங்கு சிலையின் உயரமும் குறைவே.

அந்த புகைப்படத்தை பாருங்கள்.




From Gangaikonda Chozapuram


From Gangaikonda Chozapuram

பார்த்த உடன் சொல்லி விடலாம் இது ஒரு நாயக்கரின் சிலை. சிவனின் மண்டபம் இது. அவரைச்சுற்றி தேவகணங்கள் ஆடுகின்றன.

இனி ஆராய்ச்சி:

1. நாயக்கர் கால சிலை என்பதன் முதல் அடையாளம் கிரீடம். சோழர்களின் கிரீடத்திற்கு ஈடு இணையே இல்லை இவ்வுலகில். இதற்கு முந்தைய படத்தில் சிவனின் கிரீடத்தை பாருங்கள்!
2. சோழர்களின் ஒவ்வொரு சிலையும் ஒரு வித கலைநுணுக்கத்துடன் விளங்கும். கோயிலில் இருக்கும் ஒவ்வொரு சிலையின் அலங்காரமும் வேறுபட்டிருக்கும் ஆனால் சோழத்தின் அடையாளம் அதில் மிக ஆழமாய் இருக்கும்.
3. இந்த ‘படி’ (அளக்கும் படி போன்ற தலைக்கிரீடம் விஜயநகர மன்னர்களின் அடையாளம்), பல கோயில்களில் கிதேவராயர் அணிந்திருக்க நாம் காணலாம்.
4. சிலை இருக்கும் மண்டபம் சிதைக்கப்பட்டு, இந்த சிலை திணிக்கப்பட்டிருக்கிறது.
5. சிலை பூணூல் அணிந்திருக்கவில்லை.
6. சிலையை சுற்றி சிவகணங்கள் அமர்ந்திருக்கின்றன. அவை அவரை வணங்குகின்றன. (மன்னர்களை சிவகணங்கள் என்றும் வணங்காது, சிவன் மட்டுமே இறைவன்)
7. வேறெந்த பிரகார மண்டபமும் இப்படி உடைக்கப்பட்டு, சிலை திணிக்கப்பட்டிருக்கவில்லை - அவை முழு-ஆளுயர சிற்பங்கள் - ஒரே கல்லில்- பிரகாரத்தோடு இணைந்திருக்கும்.
8. சிலையின் பீடம் சுவற்றிற்கு வெளியே இருக்கிறது


சோழர்களுக்கு பின்வந்த விஜயநகர பேரரசு பல சோழக்கோயில்களில் தங்களின் வேலையைக் காட்டி இருக்கிறது. இதை நான் கோலார் (ராசேந்திர சோழர் எடுத்த கோலாரம்மா கோயில்), http://eyilnadu.blogspot.com/2009/07/blog-post.html பெங்களூர்(தொம்ளூர் -சொக்கநாத கோயில் - இதை பெருமாள் கோயிலாக மாற்றிவிட்டிருக்கிறார்கள்), தஞ்சை பெரியகோயில் மற்றும் பல கோயில்களில் கண்டிருக்கிறேன். பெரும்பாலான மொட்டை கோபுரங்களின் மேல் ராஜகோபுரம் கட்டியதும் இவர்களே.

இவர்கள் இந்து மன்னர்கள் என்பதால் இத்தோடு சென்றது - இல்லையெனில் கோயில் சூறையாடப்பட்டு சிலைகள் மூக்குடைபட்டிருக்கும்.

ராசேந்திரசோழன் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார் - உலகையே வெற்றிகொண்டு ஊர்திரும்பி தான் கட்டிய கோவிலில் ஒரு நாயக்க மன்னன் வந்து தன் சிலையை திணிப்பான் என்று! ராசேந்திரன் இதை முயன்றிருந்தால் - இலங்கை முதல் மலேசியா, கம்போடியா, சுமத்ரா, பிலிப்பைன்ஸ் முதல் உள்ள கோயில்களிலெல்லாம் அவரின் சிலை தான் இருந்திருக்கும். நம்ம ஆளுங்க ரொம்ப நல்லவங்க..

இதைவிட பெரிய பயங்கரம் - யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பம் தஞ்சை பெரிய கோவிலில் இருக்கிறது. அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

புதன், 29 ஜூலை, 2009

மோடிக்லியானி - திரைப்படம் - ஓவியம்

Modigliani திரைப்படம் பார்ப்பதற்கு முன்பே அவரைப் பற்றி வாசித்திருக்கிறேன். பிக்காசோ’வின் சமகாலத்தவர் மற்றும் நண்பர். அதீத குடிப்பழக்கம் மற்றும் மோசமான உடல்நிலையால் இளவயதிலேயே மரணித்தவர்.

Andy Garcia நடித்த Modigliani என்ற திரைப்படம் அவரின் வாழ்க்கை வரலாறு. அருமையான திரைப்படம். ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு Modiglianiயை தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த திரைப்படத்தின் முடிவில், பிக்காசோவும், அவரும் மற்ற ஓவியர்களும் ஒரு ஓவியப்போட்டியில் பங்குபெறுவர். அதற்காக Modigliani வரையும் ஓவியம் உலகபுகழ்பெற்றது.

அதை உந்துதலாக கொண்டு நான் ஒரு படம் வரைந்தேன் சமீபத்தில். எண்னெய் வண்ணம். உங்களின் பார்வைக்கு.



zeestudioவில் அடிக்கடி Modigliani திரைப்படம் போடுவார்கள். அலுக்காத படம் - Art Film - Artist குறித்த படம். ஹஹ.


மேலதிக விவரம் வேண்டுவோர் விக்கிபீடியாவில் இவரை பிடிக்கலாம். இந்த முகவெட்டிற்கு Andy Garcia பொருத்தமான தேர்வு. இவரின் காதல் மனைவி இவர் இறந்த இரண்டு நாளில் தற்கொலை செய்து கொண்டார் - காவிய - ஓவியக் காதல். மிகவும் அழகான காதல் கதை இவர்களுடையது. :(.


ஆயிரத்தில் ஒருவனின் வரலாற்றுப் பிழை - வைரமுத்து மற்றும் கர்நாடக சங்கீதம்




தமிழை புனரமைத்ததில் சோழர்களின் பங்கு மகத்தானது. பல்லவ காலம் வரை பிராகிருதம், சமசுகிருதம் என அரசாங்க கல்வெட்டுகளில் இடம்பெற்ற நிலை மாறி, தமிழ் முழுமூச்சுடன் அரசாங்க மொழியாக நிலைபெற்றது சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தான். ராஜராஜரின் காலம் முதல் தமிழ் கோயில் மொழியாகவும் நிலைபெற்றது.

ராசராசரின் காலம் 10ஆம் நூற்றாண்டு. அக்காலத்திய ராசராசேசுவர உடையார்(தஞ்சை பெரிய கோயில்) கோவிலின் கல்வெட்டுகள் மிகத்தெளிவாக திருப்பதிகம் கோவிலில் ஓதப்பட்டதாக சொல்கின்றன. திருமறை கண்ட சோழன் என ராசராசர் மிகவும் மதிப்புடன் வழங்கப்படுகிறார்.

பார்க்க: கல்வெட்டின் படி இணைப்பு.

சம்பந்தர், நாவுக்கரசர் மற்றும் நம்பியாண்டார் நம்பி பெயர்களில் தனித்தனி குழு அமைத்து 48 பேர் திருப்பதியம் ஓதுவதும் இருவர் அதற்கு வாசிப்பதும் என 50 பேர் கொண்ட குழுவுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் கல்வெட்டாக வடிக்கபப்ட்டுள்ளது தஞ்சை பெருவுடையார் கோவிலில்.

நிற்க.

ஞாயிரன்று ஒளிபரப்பான ஆயிரத்தில் ஒருவன் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் நெல்லாடிய நிலமெங்கே எனும் பாடலுக்கு வைரமுத்து அவர்கள், நீலகண்ட சாஸ்திரி முதல் ராசமாணிக்கனார் வரை வரலாற்றை மீள்வாசிப்பு செய்து பாடல் எழுதியதாக தம்பட்டம் அடித்தார். இருந்து விட்டு போகட்டும் - கூடவே நித்யசிரி மகாதேவன் ஒரு தெலுங்கு பாடலை பாடினார். துணுக்குற்றேன் நான்.
சோழர்கள் காலத்தில் ஏது தெலுங்கு கர்நாடக சங்கீத பாடல்??

கர்நாடக சங்கீதத் தந்தையான புரந்தரதாசர் விஜயநகர பேரரசர் காலத்தவர். காலம் பதினைந்தாம் நூற்றாண்டு. விஜயநகர பேரரசின் வருகையை முன்னிட்டே தமிழகத்தில் தெலுங்கின் வாசம் ஆரம்பிக்கிறது. அதுவும் ஆட்சி மொழியாக இல்லாமல் குமுகாய வழக்கில் பேச்சு மொழியாக. 16-17 நூற்றாண்டில் தெலுங்கு கருநாடக இசையில் - தமிழகத்தில் நுழைகிறது.

இந்த பின்புலத்தில் சோழர்கள் குறீத்த வரலாற்று படமான ஆயிரத்தில் ஒருவனில் (சோழம் என பாடல் வரிகளில் வருகின்றது மற்றும் அவர்கள் பெரியகோவிலை பலமுறை விளம்பரத்தில் காட்டினார்கள்! ) தெலுங்கு பாடல எந்த வரலாற்று அறிவு ஜீவியின் கருத்தமைவு எனத்தெரியவில்லை. துணை இயக்குநர்கள் சற்று சிரத்தை எடுத்திருக்கலாம். தெலுங்கு சோழர்கள் என ஒரு பிரிவு இருந்த போதிலும் இவர்கள் பல்லவ-சோழ கூட்டுறவில தெலுங்கு தேசத்தில் ஆட்சிபுரிந்தவர்கள், தமிழே அப்போதும் ஆட்சிமொழி.

தெலுங்கு முழுவீச்சில் தற்போதைய ஆந்திராவில் வலம்வரத்துவங்கியது கிருஷ்ணதேவராயரின் காலத்தில். அதும் அங்கு - தமிழகத்தில் அல்ல. எனவே தமிழுக்காய் வாழ்ந்து மடிந்த நிகரில் சோழமண்டல அரசர்கள் தெலுங்கு பாடலை கேட்பது செல்வாவின் புண்ணியத்தில் தான்! கடல்கடந்து வென்றாலும் இன்னமும் அவர்களின் கல்வெட்டுகள் தமிழையே தாங்கி நிற்கிறது. கோலார் /பட்கல் என தூரத்து கன்னட கோயில்களிலும், பெங்களூர் கோயிகளிலும் தமிழ் கல்வெட்டுகள் இன்னமும் உள்ளன.

வைரமுத்துவாவது சொல்லி இருக்கலாம். நீலகண்ட சாஸ்திரியும் ராசமாணிக்கனாரும் அவருக்கு புகட்டிய வரலாற்று அறிவு இதுதானா?? வசனம் என்றால் விட்டுவிடலாம், பாடல் என்பது வைரத்தின் இலாகா தானே?? 12 இல்லை 13-14ம் நூற்றாண்டு என்றாலும் அது தமிழிசை தான். தெலுங்கில் கருநாடக சங்கீதம் பாடப்பட்டது மிகச்சமீபமாகவே. அதற்குமுன் திருப்பதிகமும், பாசுரங்களும் நெஞ்சை அள்ளும் தமிழில் கோயில்கள் தோறும் பாடப்பட்ட பொற்காலம் அது.

பரதநாட்டியம் அல்லது பழந்தமிழ் என்றாலே தெலுங்கு பாடல்கள் என்ற பொதுப்புத்தியை எந்தச்செருப்பெடுத்து விளாசுவது எனத்தெரியவில்லை.

வெள்ளி, 24 ஜூலை, 2009

ஐந்திணை ஐம்பது - நூலனுபவம்

வாசித்தல் அவரவர் விருப்பம் சார்ந்தது. தேடித்தேடி வகைவகையாய் படிப்பது நம் நுட்பத்தை வளர்தெடுக்க வழி செய்கிறது. எடுத்ததெற்கெல்லாம் ஆங்கில நூற்களை மேற்கோள் காட்டும் நம் அன்பர்கள், தமிழின் தொன்மையான இலக்கிய சுரங்கத்தின் பெருமையை அறியாதவர்களாகவே இருப்பது வேதனையளிக்கும் உண்மை. பழந்தமிழ் இலக்கியங்களை படித்து மகிழ பெரும் புலமை தேவையென பலரும் நினைத்துக்கொண்டிருப்பதே அதற்கான அடிப்படை என நினைக்கிறேன்.

ஒரு புதிரை அதற்கான நேரமெடுத்து ஆராய்ந்து விடுவிக்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியே பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் பொருந்தும். இலக்கியங்கள் அதற்கான நிலபரப்பு(திணை), மக்கள், துணைக்கூறுகள் என மிகவும் கவனமாக வடிக்கப்பட்ட சித்திரங்கள். பக்தி இலக்கியத்திற்கு முற்பட்ட சங்கபடைப்புகள் அனைத்தும் இந்த திணைபகுப்பின் கீழ்வரும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய மொழியில் சொல்வதென்றால், கோயம்புத்தூர் குசும்பு, திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லி, காஞ்சி பட்டு என நாம் வகைபடுத்துவது போல.

திணைக்குரிய மக்கள் புரியும் தொழில், நிலப்பரப்பு, வணங்கும் தெய்வம், பறவைகள் முக்கிய உறுப்புகளாக கொண்டு கட்டமைக்கப்படும் சங்க இலக்கியமே இன்று வரையிலான நம் இலக்கிய முன்னெடுப்புகளுக்கான பின்புலம். இந்த அடிப்படை கொண்டு மதுரை திட்டத்தில் (http://pm.tamil.net/akaram_uni.html) மின்பதிப்பாக்கப்பட்டிருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை வாசித்து களிப்புறலாம். வார்த்தைகள் புரியாத பட்சத்தில் Dravidian Etymology Dictionary'யின் துணையை நாடலாம். தமிழ் செறிவான மொழி என்பதால், ஒரு வார்த்தை பல அர்த்தம் காட்டும், சூழலுக்கேற்ப பொருத்தி அர்த்தம் காண வேண்டும்.

எல்லாமே வெறுத்துப்போகும் ஒரு சூழலில் நான் பழந்தமிழ் சுவடிகளை புரட்டுவது உண்டு. என்காதல் பெரும்பாலும் சங்கநூல்களே-அகம்,புறம், பதினென்கீழ்கணக்கு நூல்கள் மற்றும் சிலம்பு. விளக்கம்றிய இயலா சூழலிலும் அதை வாசித்துக்கொண்டிருப்பதே நமை பழந்தமிழ் பூவனத்திற்கு இட்டுச்செல்லும். காதலும், வீரமும், விருந்தோம்பல் பண்பாடும், இன்றைய சூழலுக்கு பல மடங்கு மேம்பட்ட நற்கொள்கைகளும் கொண்ட ஒரு Ideal குமுகாயத்தை, இனக்குழுவை அறிந்து வையக்கலாம்.

சங்கநூல்களுக்கு பெரும்பாலும் நான் நூலறிமுகம் செய்வதில்லை. என்னறிவே அரைகுறை இதை மன்றத்தில் வைக்கும் துணிபு இல்லை இது நாள் வரை. என்றாவது ஒரு நாள் ஆரம்பிக்கவேண்டிய ஒன்று என்பதால், துணிந்துவிட்டேன். நாம் வரிந்து கொண்ட கொள்கைகளும், அரசியல் பின்புலமும், சூழல் காரணிகளும் நம் தீர்ப்புகளை தீர்மானிக்கும் காரணிகள் - அதை ஒதுக்கி வைத்துவிட்டு திறந்த மனதுடன் இலக்கியங்களை அனுகவேண்டும். அப்பொழுது தான் அக்கவி சொல்லவந்த செய்தியை முழுதாக உள்வாங்க முடியும்.

பலநூல்கள் இருந்தாலும் தற்பொழுது நான் படித்து மகிழ்ந்த ஜந்தினை ஐம்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சங்கம் பெரும்பாலும் நூல்களுக்கு பெயரிடுவதில்லை. தொகுப்பாசிரியர்கள் தற்காலத்தில் அல்லது இடைக்காலத்தில் இட்டபெயர்கள் இவை. அய்ந்து திணைகளுக்கும் பத்து பாடல்கள் வீதம் அய்ம்பது பாடல்கள் = அய்தினை அய்ம்பது.

இது காட்டில் ஆரம்பித்து(முல்லை)(முல்லை-காட்டில் பூப்பது), குறிஞ்சி(மலையும் மலை சார்ந்த இடமும்)(குறிஞ்சி மலையில் பூப்பது - மலரே குறிஞ்சி மலரே- ஏற்காடு-கொடைக்கானல்-கொல்லிமலை பகுதிகளுல் குறிஞ்சி பூக்கிறது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை-தற்பொழுது ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளது), மருதம் (மருத மரம் வயலும் வயல் சார்ந்த இடங்களில் வளர்வது), பாலை மற்றும் நெய்தல் என 5 திணைகளுக்கு 10 பாடல்கள். எனவே ஐந்திணை ஐம்பது.

காதலின் சுவை காத்திருத்தல், பிரிதலின் வலியுணர்தல், தலைவனின் வரவை நோக்கி வழிகாக்கும் விழியினள் ஆதல். காதலின் பொருண்மை பெண்களை முன்னிறுத்தியே பாடப்படுகிறது. காலந்தொறும் அவர்கள் காத்திருப்பவர்களாகவும், வினை வழி பிரிந்த தலைவனின் நிலை குறித்து அஞ்சுவது போலவும், அவன் வராமை கண்டு சினங்கொள்வதும், கண்ணீர்விடுவதும், இயற்கையை நோக்கி தன்நிலை கூறி புலம்புவது போலவும் பெரும்பாலும் பாடல்கள் வடிக்கப்படுவது இயல்பு.

இதில் கவிஞரின் கற்பனைத்திறன், புலமை, உவமையின் செறிவு ஆகிய உறுப்புகளின் அடிப்படையில் பாடல்களின் சுவை அமையும்.

இனி திணைக்கு ஒன்று வீதம் 5 பாடல்களை பார்ப்போம். ஆசிரியர் மாறன் பொறையனார்.

திணை: முல்லை (காடும் காடு சார்ந்த இடமும். - அக்காலத்தில் முல்லை காட்டில் ஊன்றி படர்ந்திருக்கும்)
ஒழுக்கம்: ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி
மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி!
கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்
பீர்நீமை கொண்டன தோள்

தலைவன் வினைவழி பிரிந்து சென்றிருக்கிறான். கார்காலத்திற்கு முன்பே வந்து விடுவேன் என உரைத்துச் சென்ற தலைவன் இன்னமும் வந்து சேரவில்லை. தலைவி தன் தோழியிடம் புலம்புகிறாள்- பணிமொழி மயில் கூவ மலைமேல் வந்தாடும் கார்மேக மழையை காணும்போதெல்லாம் என் தோள்கள் என் கண்ணீரைக் கண்டது. மலைமேல் பொழியும் மேகம் போல் என் கண்ணீர் என் தோள்மீது வழிகிறது.

என்ன ஒரு இலக்கிய சுவை பாருங்கள். மயில் கூவியதற்கு இரங்கி அந்த மழை பொழிகிறது. நான் இங்கு காத்திருக்கிறேன். என்னை தேடி அவர் இன்னமும் வரவில்லை! மஞ்ஞை -மயில்.

குறிஞ்சி: மலையும் மலைசார்ந்த இடமும்.
ஒழுக்கம்: புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

கானக நாடன் கலவான்என் தோளென்று
மானமர் கண்ணாய்! மயங்கல்நீ- நானம்
கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பும் அகன்றுநில் லா.

முல்லை திணையை சேர்ந்தவன் என்னுடன் கலக்கமாட்டான் என வருத்தப்படாதே மான்விழியாளே, அருவி என்றும் மலைமீது வழியவே விரும்பும், விலகி நிற்காது. அதுபோல தலைவனும் உன்னைச் சேரவே விரும்புவான், தள்ளிநிற்க மாட்டான். :)

புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்
தினைகாத் திருந்தேம்யாம் ஆக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு.

பொன்போன்ற பூந்தழை (தாழை-தாழம் பூ) சூடிய அல்குல் பெண்ணே, சாரலுக்கு நாம் காத்திருக்குக்கையில், ஏதே வேலை நிமித்தம் போல்வந்து நம்ம்மிடம் பேசிய தலைவன், நம்மிடம் உண்மையிலே கேட்க எண்ணியது ஒன்றுண்டு. சூழல் கருதி அமைதியாக சென்றுவிட்டார். (நூல் விடுவது - நா இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன், உங்க வீடு இந்த பக்கமா இருக்கு? சரி நேசம்ணி பொன்னையா தெரு எங்க இருக்கு?? :) )

மருதம்: வயலும் வயல் சாந்த இடமும்
ஒழுக்கம்: ஊடலும் ஊடல் நிமித்தமும்

போதார்வண்டு ஊதும் புனல்வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்
அறிவயர்ந்து எம்இல்லுள் என்செய்ய வந்தாய்
நெறி அதுகாண் எங்கையர் இற்கு.

தூது போகும் தலைவனின் நண்பன் நன்றாக வாங்கி கட்டிக்கொள்கிறான் தலைவியிடம். ஊடல் ஒழுக்கம் என்பதால் தலைவியின் கோபம் கொடிகட்டி பறக்கிறது. (வடிவேலு: திஸ் பிளட்? சேம் பிளட்! )

திணை : பாலை (மணல்வெளி - குறிஞ்சியும் முல்லையும் திரிந்த இடம்)
ஒழுக்கம்: பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பார் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

இந்த கதை பல படங்களில் பிய்த்து தொங்கவிடப்பட்ட கதை. இத்துணை மென்மையான இதயங்கொண்ட காதலர் என்னை எப்படி பிரியத் துணிந்தார் என தலைவி பிரியும் காதலன் குறித்து கவலையுறுகிறாள். :(

திணை: நெய்தல் (கடலும் கடல் சாந்த இடமும்)
ஒழுக்கம்: இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்
கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன்.

பிரிவதற்கு முன்பு மகிழ்ந்திருந்த பூம்பொழில் காணும்போதெல்லாம் மனம் அவனை நினத்து ஏங்கியது, வருத்தம் தாங்காமல் நான் கண்சிவக்க அழுதேன். வீங்கிய முகம் கண்ட அன்னை, என்ன ஆயிற்று? எதற்காக அழுதாய் என கேட்க.. நான் கடல் வந்து என் மணல் வீட்டை அழித்தது என்று கூறீனேந் என தலைவி பாடுகிறாள்.

இங்கு பிரிவு கடல் போலவும், அவளின் மகிழ்வு மணல் வீடு போலவும் உவமைபடுத்தப்படுகிறது. கேட்ட அன்னைக்கு சும்மா ஒரு பொய்யை சொல்லி பசப்புகிறாள். பெரும்பாலான காதலின் துன்பம் இவ்வாறாகவே அமைகிறது.

களவொழுக்கம் அக்காலத்தில் இயல்பான ஒன்றென்பதாலும் பெண்கள் மிகவும் கவலைக்குள்ளாகின்றனர். சென்ற காதலன் விரைவில் வந்து கைபிடிக்கவில்லை என்றால், ஊரார் முன் தன் குடும்ப மானம் போய்விடும் மற்றும் உடலும் காட்டி கொடுத்து விடும். எனவே பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இப்போதிருக்கும் அத்துணை இடர்களும் அந்த காலத்திலும் இருந்தது. பெண்களின் கண்ணீர் சங்க இலக்கியம் முழுவதும் இறைந்து கிடக்கிறது.

இலக்கியம் வெறும் சுவை இல்ல. அது வாழ்க்கை. பல்வேறு பெண்களின், ஆண்களின் நிலையை கண்டு உணர்ந்து படைக்கப்பட்ட காலக்குறிப்பு. காதலின் இன்பம், வலி, பிரிவின் வேதனை, இயலாமையின் கோபம் என பண்முக குறிப்புகளை நாம் சங்க இலக்கியத்தில் அறியலாம். இன்றளவிற்கும் அப்பாடல்கள் காட்டும் காதல் உலகம், நம் மனதிற்கு மிக நெருக்கமாய், நம் முன்னேர்கள் பட்ட உயரிய பாடுகளை நமக்கு விளக்கிச்செல்கிறது.

ராசேந்திர சோழரின் சிலை கர்நாடகாவில்

சோழவளநாட்டின் மீதான தீராக்காதல் நாடந்தாய் வாழி காவேரி என சங்ககாலம் முதல் கவிஞர்களின், அரசர்களின் கனவுத்ததேசமாய் சிறப்புற்ற தேசம். அணைகளின்றி கரைபுரண்ட அகண்ட காவிரியை இப்பொழுது நினைத்தாலும் மனம் சிறகுமுளைத்த தும்பியாய் அந்தப்புனலில் நீராடி மகிழ்வுறும். காவிரிக்கரை தந்த இலக்கியமும், ஆட்சிமுறைகளும் வீரமும் வரலாற்றின் பக்கங்களில் தனிக்கவனத்தை பெற்று நிகரில்சோழம் என்பதை உறுதிசெய்வது.

காவிரி தோன்றிய காலந்தொட்டே சோழர்கள் அதன்மீது தனிக்காதல் கொண்டவர்களாக இருந்திருக்கவேண்டும். கரிகாலன் - கல்லணை- காவிரி இன்றும் ஓர் தீராக்காதல் கதை. அந்தச்சோழ வரிசையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெரும்புக
ழ் கொண்ட ஓர் அரசன் உதித்தானென்றால் அது ராசேந்திர சோழன் மட்டுமே. கடல்கடந்து தேசங்களை தன் காவிரிதேசத்துடன் இணைத்த இணையில் சோழ அரசன் அவர்.

கங்கையை கொண்டுவந்து சோழபுரத்தில் அமர்த்தி, கங்கைகொண்ட சோழபுரத்தை படைத்தவன். தன் தந்தைக்கு தஞ்சை என்றால், தன் பெயர் சொல்ல ஒரு நாட்டை உருவாக்கி அங்கிருந்து அடுத்த 200 ஆண்டுகள் சோழ பரம்பரை ஆட்சி புரிய அடித்தளம் இட்டவன் இராசேந்திரன். தமிழக அலெக்சாந்தர் என்றால் அவன் மட்டுமே. அலெக்சாந்தரும் கடல் கடந்து போர் புரிந்தது இல்லை. பகை அஞ்சும் தகை சால்பு ஒன்றே அரசனின் தனிச்சொத்து, அதன் முழு உருவம் ராசேந்திரன்.

தெற்கு என அந்நாளில் அறியப்பட்ட ஒட்டுமொத்த நிலப்
பரப்பும் ராசேந்திரனின் கீர்த்தியை பாடி நின்றது. கங்கைகொண்ட சோழபுரத்து கோவில் எனும் அழகிய கலைப்பொக்கிசத்தை நமக்கு விட்டுச்சென்ற கலைரசிகன். அந்தகைய தகைசான்ற தமிழனின் சிலை, இன்றைய கர்நாடக கோலாரில் இருக்கிறது என்ற செய்தியை கேட்டபின்பு நிலைகொள்ளவில்லை எனக்கு. உடனே வண்டியை கிளப்பிவிட்டோம் கோலாரை நோக்கி.

பெங்களூரில் இருந்து 70 கீமி, பழைய சென்னை ரோட்டில் அமைந்து இருக்கிறது கோலார். தங்கத்துக்கு பெயர்போன கோலார் தான். ஊர்க்கோடியில் கோலாரம்மா கோயில் அரசு தொல்பொருள் துறை வசம் உள்ளது. கோயிலை பார்த்த உடன் ஒரு குதூகலம் எங்களை சூழ்ந்து கொண்டது, ஏனெனில் அது ஒரு சோழக்கோயில். சோழர்களின் கையெழுத்து படைப்பான “மொட்டை கோபுரம்” நம்மை வரவேற்கிறது
.

நுழைவாயில் பெருந்தூணை பிற்கால கிருஷ்ணதேவராயன் அலங்கார வேலைப்பாடுகள் செய்து சிறப்பித்துள்ளார். அதில் அவரின் சிலை ஒன்றும் இருக்கி
றது. மொட்டை கோபுரம் தாண்டியதும் கொடிமரம் அப்புறம் பலிபீடம். அதன் பின்பு சிறு தூண் கொண்டு நிறுவப்பட்ட மண்டபம் அல்லது திண்ணை போன்ற அமர்விடம். அந்த தூணில் சேனாவதி சோழசோழ சோழியவரையன் என்று எழுதப்பட்டு இருக்கிறது.

உள்ளே நுழைந்தால் இரண்டு கருவறை- ஒன்று கிழக்கு நோக்கி ஒன்று வடக்கி நோக்கி. கோவில்ன் சுவர்களெங்கும் அங்கிங்கெனாதபடி கல்வெட்டுகள். கருவரையின் பின்புற சுவற்றில் இருந்து கல்வெட்டு ஆரம்பிக்கிறது “ திருமன்னி வளர இருநிலமடந்தையும் போர்செயப்பாவையும்” என மிகப்புகழ்பெற்ற ராஜேந்திரரின் மெய்கீர்த்தி ஆரம்பிக்கிறது.

கருவறைக்குள் நுழைய பக்திமான் போல நடிக்க வேண்டியதாயிற்று. :). உள்நுழைந்ததால் கிடைத்த மற்றொரு பரிசு, கருவறக்கு நேரெதிரே ஒரு தூணில் ராசேந்திரரின் மெய்கீர்த்தி. 70 வரிகள் கொண்ட ராசேந்திரரின் மெய்கீர்த்தியில் முழுதும் இடம்பெற்றீருப்பது முழுவதும் அவர் வெற்றிகொண்ட நாடுகளே எனில் அந்த பேரரசனின் தீரம் எத்தகையதாக இருந்திருக்கும்?

இனி புகைப்பட ஆவணம்.



ராசேந்திரனின் போர்க்கோலக்காட்சி அவரின் தீரத்தை வீரத்தை கல்லில் வடித்து காலத்தில் சமைத்துவிட்டது. ராசேந்திரனின் சிலையை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடம் மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். ராசேந்திரரின் ஆட்சிக்காலத்தில் பிடரி என்றழைக்கப்பட்ட கோலாரம்மா கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானம் குறித்த கல்வெட்டு கோயில் முழுவதும் வரிகளாய் வழிகிறது.

பெங்களூரில் இருக்கும் ஆர்வலர்கள் சென்று கண்டு களிக்கலாம். மிகவும் குறைவான தூரம்-2மணி நேரத்தில் கோலாரை அடைந்து விடலாம். சாலையும் நன்றாக இருக்கிறது. ராசேந்திரனின் மெய்கீர்த்தி சொல்வது போல் போர்செயச் செல்வி அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு துணை இருந்ததால், தோல்வியை கண்டறியா உலக போர்ப்படை தலைவர்களின் வரிசையில் ராசேந்திரரின் பெயரும் இடம் பெற்றிருப்பது ஒரு சிறப்புச்செய்தி.

செவ்வாய், 14 ஜூலை, 2009

எயில் நாடு

நுளம்ப பாடி என இராசராசனின் மெய்கீர்த்தியில் குறிக்கப்படும் கிருட்டிணகிரி, எயில் நாடு எனவும் வழங்கப்பட்டிருக்கிறது. எயில் கொப்பம் - ராஜராஜேந்திரன் மெய்கீர்த்தி.

மலைகள். காணுமிடமெல்லாம் மலைகள். கொல்லிமலையில் ஆரம்பித்து தருமபுரி கிருட்டிணகிரி-ஒசூர் வரை மலையும் மலை சார்ந்த இடமும் என குறிஞ்சி திணைக்குரிய நிலப்பரப்பு, எயில் நாடு என்று வழங்கப்படுகிறது இடைக்காலத்தில். சமீபத்திய ஆய்வுகள் கற்காலந் தொட்டு ம்னிதர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான் சான்றுகளை கண்டுபிடித்துள்ளன. குகை ஓவியங்கள் அதிகமாக கிடைக்கும் ஒரு மாவட்டம் கிருட்டிணகிரி.

விடுகாதழகிய நாடு எனவும் இப்பகுதி குறிக்கப்பட்டிருக்கிறது. சவ்வாது மலை ஏலகிரி மற்றும் அள்ளி தெளித்தது போல் எங்கும் குறுமலைகளாக காட்சியளிக்கும் இந்நிலப்பரப்பு, நான் பார்த்து, வியந்து, துய்த்து வளர்ந்த பகுதி. நடந்தாய் வாழி காவிரி என இளங்கோ பாடிய பொன்னி தமிழ்நாட்டில் முதலடி வைக்கும் எயில்தேசம். அவளின் தங்கை தென்பெண்ணையும் பாய்ந்து வளம்நிறைக்கும் சீரிளமை நாடு.

அந்த பின்புலத்தில் இந்த வலைபதிவிற்கு எயில்நாடு எனப்பெயரிட்டுள்ளேன்.