திங்கள், 13 செப்டம்பர், 2010

நிகழின் மணல்

முடிவிலாக் கனவின்
முடிச்சவிழும் இளகிய
பொழுதொன்றின் குரல்வளை
நெறித்தாய் கனவின்
உதிரத்துளி நினைவின்
வாசமெங்கும் வலியரற்றி

பிரிவின் பெரும்புனல்
நனைக்கும் கரையெங்கும்
நினைவின் ஈரம்
நிகழின் மணல்வெளி
வெறித்த ஒற்றைமேகம்
ஒப்பாரியில் கரைபுணரும்
அலையறியா ஆழ்கடலில்
ஆதியின் மெல்லிருள்


கால் மாற்றி
கால் மாற்றி
நீ ஆடும்
நடனத்தின்
தாளம் நான்
மிதிபடும் இதயத்தின்
பாடல் ஒலிக்கும்
தூரத்து மழைவனத்தில்
தகதிமி என மலரும்
பூக்களின் வாசம்
பௌர்ணமி இரவில்
பாடலாய் உருக்கொள்ளும்
இரகசியம் சலசலத்து
மருண்டது ஓடை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக