வியாழன், 15 ஏப்ரல், 2010

முயத்தலின் மழைக்காடு

பேனா முனையில் துயிலும்
கவிதையென சிறகுகளின்
மென்நுனியில் கண்விழித்தது
இன்றைக்கான பறத்தல் தூரம்

தொலைவின் அளவை
வேர்நுனி அளக்குமா
இலைதழுவும் காற்று
அளக்குமா பயணத்தின்
கனவுகளில் வானம் மட்டுமே
தொடக்கிடைக்கும் தூரத்தில்

உன்முத்தத்திற்கு பின்பும்
பெய்துகொண்டிருந்தது மழை
நீதான் முத்தமழையா
நீ அணைப்பதற்கு முன்பே
எரிந்துகொண்டிருந்தது
மயிர்க்கால்களின் வழியே
தொன்மத்தின் முயத்தல்
கங்குகள்

முயத்தல் மழை இன்னமும்
சொட்டிக்கொண்டிருக்கும்
இலைநுனி கலைக்கும்
நினைவின் அடுக்குகளில்
வெளிறிய அல்குலின்
மெல்லிய துடிப்புகள்

இடைவெளி தொலைந்த
இடைகளின் வெளியில்
உயிர்பெற்று விரிந்தது
ஒளியும் நுழைந்தறியா
மழைக்காடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக